Sunday, February 15, 2009

மூச்சு அடங்கிய முத்துக்குளியல்

லக வரலாற்றில் முதன்முதலாக முத்துக்குளியல் நடைபெற்றது தமிழ்நாட்டில் தான். கடல் வணிகத்தில் ஈடுபட்ட அனைத்து நாடுகளுக்கும் இங்கிருந்து முத்து ஏற்றுமதியாகியிருக்கிறது. நமது ஆனி முத்துக்கு சர்வதேச சந்தையில் அமோக மதிப்பு.

சிப்பி பிளந்தாற்போல் நீதி சொன்ன சாலமோனுக்கு முத்து பதித்த பொன்னகை ஒபீர்( உவரி) துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. கிளியோபட்ராவின் சங்கு கழுத்தை கொற்கை முத்து அலங்கரித்திருக்கிறது. எலிசபெத் மகராணியின் மணிமகுடத்திலும் லண்டன் அருங்காட்சியகத்திலும் தூத்துக்குடி முத்து இடம் பெற்று இருக்கிறது.

மண்டபம் முதல் மணப்பாடு வரையான பண்டைய தென்பாண்டி மண்டலத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட கடற்பாறைகளில் முத்து சிப்பிகள் விளைந்தன. கிரேக்கரும் அரேபியரும் ஈழத்து கடலாடிகளும் பாண்டிய கடற் பகுதிகளில் முத்து குளித்துள்ளனர்.
கி.மு 4ம் நுற்றாண்டில் உலகம் சுற்றிய கடற்பயணி பிளினி கொற்கை கடலில் மரண தண்டனை பெற்ற கைதிகளை முத்து குளிக்கும் தொழிலில் பயன்படுத்தியதாக எழுதியுள்ளார்.

தூத்துக்குடி பகுதியில் மீன்பிடி தொழிலைப்போல முத்துக்குளித்தலும் முழு நேர தொழிலாக விளங்கியிருக்கிறது. நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படாத அந்தக் காலத்தில் முத்து குளிப்பது எளிதான காரியம் இல்லை. பாய்மரப்படகுகளில் பல கடல் மைல் தூரத்தில் உள்ள சிப்பிப்பாறைகளுக்கு செல்லவேண்டும். துறைமுகத்துக்கு நேர் திசையில் சிலுவை பார், பெரிய பார், வைப்பாருக்கு நேர் அழுகல் பார், திருச்செந்தூருக்கு நேர் கருவல் பார், புன்னக்காயலுக்கு நேர் குடமுத்திப்பார், மஞ்சள் காயலுக்கு நேர் பூந்தோட்டப்பார் என்று தூத்துக்குடியை சுற்றி நூற்றுக்கு அதிகமான சிப்பிப்பாறைகள் இருந்தன. காற்று பலத்து வீசும் பருவ காலங்களில் பாறைகளை சென்றடைய முடியாமல் பாதியிலே திரும்பி வரவும் நேரிடும்.
பதினைந்து பேர் பயணம் செய்யும் படகில் முத்து குளிப்பதற்கென்று பத்து குளியாள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவ ஐந்து தோடைகள் கூடவே பயணம் செய்வார்கள். பத்து கிலோ எடையுள்ள கல் அல்லது இரும்பு வளையத்துடன் பினைக்கப்பட்ட கயிற்றை பிடித்துக் கொண்டு குளியாட்கள் கடலுக்குள் குதிப்பார்கள். தரை தட்டியதும் தோடை கயிற்றை இழுத்து விடுவார். முத்து குளிப்பவர் மூழ்கி எழும் வரை தோடையின் கண்கள் அவர் மீதே இருக்கும். முத்து குளிப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திக்கு முக்காடினால் தோடை மேலே தூக்கி விடுவார். முத்து குளிப்பவர்கள் பல நிமிடங்கள் மூச்சை அடக்கும் திறனுடையவராக இருக்க வேண்டும். உள் நீச்சலிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்த முத்து சிலாபங்களில் பங்கேற்றவர்களில் ஒரு சிலரே இன்னும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான தரைக்குடியான் 6 ஆண்டுகள் முத்து குளித்தவர். அவரது அனுபவங்களை பிரமிப்புடன் விவரித்தார்.

நான் முத்துக்குளிக்கும் போது வயது 25. ஒரு வருடம் தோடையாக இருந்தேன். அதன் பின் தான் குளியாள் ஆனேன். மலையை வைத்தும் மதியை வைத்தும் தான் நாங்கள் கடற்பயணம் போவோம். சில நாட்களில் வெள்ளியை கணக்கு வைத்து அதிகாலையில் புறப்படுவோம்.
அப்போது எல்லாம் பாய்மரப் படகு தான். காற்றுக் காலங்களில் அரசாங்கத்துக்கு சொந்தமான வலம்புரி, ஜமீலியா லாஞ்சுகளில் படகுகளை கட்டி சிப்பி பார்களுக்கு இழுத்துச் செல்வார்கள். சிப்பிகள் சேகரிக்கும் பையை காலில் கட்டிக் கொண்டு கடலில் இறங்குவோம். பின்னர் அதை கழுத்தில் மாட்டிக்கொண்டு சிப்பிகளை பறித்துப் போடுவோம். ஒவ்வொரு முங்குக்கும் 50, 60 சிப்பிகள் வரை பறிப்போம். எல்லா சிப்பிகளிலும் முத்துக்கள் கிடைக்காது. கடுகு சைசில் இருக்கும் பொடி முத்திலிருந்து இலந்தக்காய் சைசில் இருக்கும் பரு முத்து வரை எப்போதாவது கிடைக்கும்.
முத்துக்குளிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் தோடைகள் உச்சி முடியைப்பிடித்து மேலே இழுப்பார்கள். வெளியே வந்ததும் முதுகில் பலமாக நாலைந்து அடி போட்டால் தான் மூச்சு சீராகும். மிக அதிகமாக மூச்சு முட்டுக்கு ஆளானவர்களை கோணிப்பாயில் வைத்து சுருட்டி படகில் போட்டு உருட்டுவார்கள்.
ரொம்பவும் ஆபத்து என்றால் படகில் உள்ள கொடியை ஏற்றுவோம். கவர்மெண்ட் லாஞ்சுகளில் வந்து காப்பாற்றுவார்கள். நான் முத்துக் குளித்த ஆறு ஆண்டு காலத்தில் பத்து பேர் வரை மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் ஒரே படகில் வந்த ஆறு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பொதுவாக சங்குகள் கண்ணை ஏமாற்றும். பக்கத்தில் இருப்பது போல தெரியும். எட்டிப் பறித்து விடலாம் என நினைத்தால் தூரம் போய்க் கொண்டே இருக்கும். அப்படியே சங்கை பிடித்தாற் போல் மூச்சடங்கிப் போய் உட்காந்து விடுவோரும் உண்டு. மூச்சுத் திணறல் ஏற்படும் போது வேகமாக எம்பினால் எப்படியும் மேலே கொண்டு வந்து சேர்த்து விடும். செயல் இழந்து நின்று விட்டால் தலை குப்புற கொண்டு போய் தரையில் அடித்து முதுகு எலும்பு முறிந்து விடும்.
சங்கு குளிக்கும் போது பளிச் சென்று தெரியும் கைகால் நகங்களைப்பார்த்து பால்சுறா வந்து விடும். எக்கு தப்பாக மாட்டிக்கொண்டால் தொடைக் கறியை குதறி விடும். பால்சுறா வந்தால் மண்ணை கலக்கி விடுவோம். அது கண்தெரியாமல் திசை மாறிப் போகும்.

ஆடா திருக்கையாலும் ஆபத்து உண்டு. அதன் வாலில் அரை அடி நீள முள் இருக்கும். வாலை சுழற்றி ஓங்கி அடித்தால் அப்படியே பொத்துவிடும். மூரைகளுக்கோ முள்ளம்பன்றி மாதிரி உடம்பெல்லாம் முள். முத்துக்குளியாள் கையில் சிலாங்கையாக கொருத்து விடும். கரையேறும் வரை கடுமையாக கடுக்கும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு முக்குளித்தாலும் எங்களுக்கு கால் வயித்துக்கூலி தான்.

பறிக்கும் சிப்பிகளில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். மீதி ஒரு பங்கும் கணிசமாக இருந்தால் தான் படகுகாரர்கள் ஓரளவு கூலி தருவார்கள்.

அரசாங்கத்துக்கு பெரும் பங்கு போவதால் சில முத்து சிப்பிகளை படகில் வைத்து வெட்டி முத்துக்களை வாய்க்குள் போட்டுக்கொண்டும் அம்மார் கயிற்றுக்குள் பதுக்கி வைத்துக் கொண்டும் வருவோம். அரசாங்க அதிகாரிகள் போடும் சோதனைகளில் முத்துக்கள் சிக்கி கொண்டால் அவ்வளவுதான். ஆனாலும் கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்றுவிடுவோம். அதிலும் அற்பத்தொகையைத்தான் படகுக்காரர்கள் எங்களுக்கு தருவார்கள்' என்றார்.
தரைக்குடியானுக்கு 10 வயது மூத்தவர் வெட்டும்பெருமாள். உசுரோடு இருக்கும் முத்துக்குளியாட்களில் மூத்த மனுஷர். முத்துக்குளிப்பு மும்முரமாக நடந்த கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். 'அப்பல்லாம் 2000 வள்ளம் முக்குளிக்க அணிவகுத்துப் போகும். சாயல்குடி பக்கம் தேன் எடுத்து பொழைச்சிக்கிட்டிருந்த எங்க முன்னோர்கள் முத்துக்குளிக்கிறதுக்காக தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்தாங்க. எங்களைப்போல ஏராளமான ஆளுங்க நாகப்பட்டணம், மலையாளம் பக்கமிருந்துல்லாம் குடியேறுனாங்க... சிலாபம் நடக்கும்போது தெனமும் ஆயிரக்கணக்கான முத்துச்சிப்பி மூட்டைகள் இறங்கும். அதை சுமக்க பெரிய பொம்புளைக கூட்டம் நிக்கும்'என்றார்.

ஆதி காலந்தொட்டு முத்துசிலாபம் நடைபெற்ற தூத்துக்குடி துறைமுகம் இன்று மூச்சடங்கி கிடக்கிறது. வெளிநாட்டு வியாபாரிகளின் நடமாட்டத்தால் இரவுபகல் தெரியாமல் முழு நேரமும் விழித்திருந்த முத்துசிலாபத்துறை ஆள் நடமாட்டமின்றி தூங்கி வழிகிறது. முத்தெடுக்க மூழ்கிய மீனவர்களின் வாரிசுகள் சங்கு குளித்து சங்கடப்படுகிறார்கள்.
பல நூற்றாண்டு கால பழந்தொழில் அழிந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பரிதவிக்கும் அளவுக்கு கடல் வளம் வற்றிவிட்ட காரணம் என்ன?
கடலிடம் கேட்டால் என்ன சொல்லும்? முத்தெடுத்த பொற்கால சிந்தனையில் மூழ்கிக்கிடந்த முன்னாள் கடலாடிகளிடமே அதையும் கேட்டோம். அனைவரும் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மீன் மேய்ந்துகொண்டிருந்த விசைப்படகுகளை கை காட்டினார்கள்.
ஓய்வு பெற்ற மீன் வளத்துறை உதவி இயக்குநர் அந்தோணி சாமி சற்று விளக்கமாகவே சொன்னார்.' வெள்ளக்காரங்க காலம் வரை எந்த பங்கமும் இல்ல. நவம்பர்ல இருந்து பெப்ருவரி வரை தங்கு தடையில்லாம குளியல் நடந்தது. முத்து சிலாபம் நடக்குற காலத்தை அரசு 'கெஸட்'ல வெளியிடுவாங்க....அதை பார்த்து இலங்கை, அரேபிய கடலாடிகள்லாம் வந்து முக்குளிச்சிட்டு போனாங்க.1955ல நார்வே விஞ்ஞானி இலுகாசன் வடிவமைச்ச நவீன படகுகளை 59ல அரசாங்கம் மீன்பிடித்தொழிலுக்கு கொண்டு வந்தது. அதுல இழுவலையை பயன்படுத்துறதால கடலடியில உள்ள சிப்பி சிதைந்தது. உண்மையில் அதுக்குப்பேரு இழுவலை இல்ல, தரை சுரண்டி.
இப்ப தெர்மல் பிளாண்ட் இருக்குற இடத்துல மாங்குரோவ் காடு மண்டிக்கிடந்தது. தொழிற்சாலைகளால தண்ணீர் மாசுபட்டுப்போச்சு. உப்பளக்கழிவு நீராலும் உயிரினங்கள் அழிய வாய்ப்பிருக்கு.'

அந்தோணிசாமியின் வார்த்தைகளை வழிமொழிந்தார் கடலோர குடியிருப்பு வளர்ச்சி சங்கத்தலைவர் பகத்சிங். இவர் முக்குளிக்கும் பாய்மரங்களை நடுக்கடலுக்கு இழுத்துப்போகும் வலம்புரி படகின் மேல்தள ஊழியராக பணிபுரிந்தவர்.

மன்னார் வளைகுடா கடலில் இருப்பது தூய நீர்(விர்ஜின் வாட்டர்). இறாலும் , முத்துசிப்பியும் நல்லா வளரும். தொழிற்சாலை பெருகியதால் பல்லுயிர் இனப்பெருக்கம் தடைபடுது. 1962 வரை முத்து குறைவில்லாம கெடைச்சுது. 62ல் கவர்னர் விஷ்ணுராம் சேத்தி துறைமுகப்பகுதிக்கு வந்தப்போ ஒருத்தர் திடீர்னு கடலில் முங்கி முத்துசிப்பி எடுத்து கொடுத்தாரு. வெட்டிப்பார்த்தப்போ நல்ல முத்து இருந்தது. அதை கவர்னருக்கு பரிசா கொடுத்தோம்.
விசைப்படகு பெருத்த பிறகு சிப்பிக்கு தட்டுப்பாடாகிப்போச்சி. பத்மநாபன் தலைமை செயலாளரா இருந்தப்போ முத்துக்குளியலை வளர்க்க முயற்சி எடுத்தார். ஆனா அதுக்கு வாய்ப்பில்லேன்னு அதிகாரிங்க அறிக்கை அனுப்பிட்டாங்க'என்றார்.

ஆயிரமாயிரமாண்டுகளாக தொடர்ந்த முத்துசிலாபம் 1961ல் முடிவுக்கு வந்தது. முத்துக்குளித்த தொழிலாளர்கள் சங்குகுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1967ல் தி.மு.க. அரசு மீன்வளத்துறையில் 'சங்கும் முத்தும்' என்ற பிரிவை ஏற்படுத்தி அதற்கென்று ஒரு இணை இயக்குநரையும் நியமித்தது. அதன் மூலம் சங்கு குளித்தொழிலை காப்பாற்ற முடிந்ததே தவிர முத்துக்குளித்தொழிலுக்கு புத்துயிரளிக்க முடியவில்லை.
மூத்தின் கதை முடிந்துவிட்ட நிலையில் சங்குத்தொழிலும் சங்கு (கழுத்து) நெறிபட்ட நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர் சங்கம் வைத்து சங்கு அறுக்கும் சாகுல் அமீதும் முனியசாமியும். தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் தாராளமாக கிடைக்கும் உயிரினங்களையும் சேர்த்து சங்கு குளிப்பவர்களை வனத்துறையினர் மிரட்டுகின்றனர். சங்கு குளிப்பதையே தடை செய்து முக்குளிக்கும் தொழிலையே முடக்கப்பார்க்கிறார்கள்' என்றனர்.

பசுமை புரட்சியால் விளைச்சலை பெருக்கினோம். வீரியமான விதைகளை இழந்தோம். நீலப்புரட்சியால் மீன்பிடி அதிகரித்தது. ஆனால் முத்துக்குளி அழிந்தது. முடிந்துபோன முத்து சிலாபத்தால் அரிய வரலாற்றுப் பெருமையை பறிகொடுத்தோம்.
இயற்கை முத்தை இழந்த சோகத்தை ஈடு கட்டுவது போல் வளர்ப்பு முத்தை உற்பத்தி செய்கிறது மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம். பளபளக்கும் செயற்கை முத்து உற்பத்தியிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. என்ன இருந்தாலும் தெள்ளிய நீரோட்டத்தாலும், ஒள்ளிய கதிர் வீச்சாலும் நாலாபுற நாடுகளில் இருந்தும் வணிகர்களை கொண்டுவந்து நமது வரலாற்றுக்கு வளம் சேர்த்த தென்பாண்டி முத்துக்கு எதுவும் இணையாகாது என்றே தோன்றுகிறது.

வண்ணமுத்தும்... வளர்ப்புமுத்தும்

சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி முத்தாக விளையும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
ஆனால் மழைத்துளி முத்தாவதில்லை. சிப்பிகள் வாய் திறக்கும்போது மண்துகளோ, ஒட்டுண்ணியோ நுழைந்து விடுகின்றன. உள்ளே நுழைந்த பொருளின் உறுத்தல் தாளாமல் சிப்பியின் தோல் பையான மேன்டிலில் இருந்து சுரக்கும் திரவம் அந்த பொருளை சுற்றி பை போல மூடுகிறது. இதுவே ஒளி மிகுந்த முத்தாக உருவாகிறது.
இந்த பார்முலாவை பயன்படுத்தி சிப்பியின் இனவிருத்தி பகுதியில் மேன்டில் திசுவை செலுத்தி அதன் அருகே சிறு பாசியை வைத்து விடுகின்றனர். பாசியை சுற்றி மேன்டில் திரவம் சுரக்கிறது.முத்து வளர்கிறது.