Sunday, December 28, 2008

மறைமுகமான துறைமுகம் கொற்கை

டல் விரிந்த வாழைகள்& தாரைகள் நீந்தும் குளம்& மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும்& நீர்யானை போன்ற நாவாய்களும்& சங்கறுக்கும் ஒலியும்& முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலஞ்சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

‘ இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென
கலிகெழு கொற்கை‘
என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே சான்று பகர்ந்தபின் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும்.
மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை‘ என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.

கி.மு. 4&ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4&ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.
பொதுவாக தல வரலாற்றுக்கு
ஆதாரங்களையும், ஆவணங்களையும் ஆய்வறிஞர்கள் காட்டுவார்கள். நாம் சாமான்யர்கள். கண்கண்ட காட்சிகளையும், வாய் மலர்ந்த சாட்சிகளையும் பதிவு செய்யலாம் என்றெண்ணி தூத்துக்குடியிலிருந்து கொற்கை நோக்கி புறப்பட்டோம்.

செல்லும் வழியிலேயே கொற்கை சரித்திரத்துக்கு சான்று பகரும் பல இடங்களை காண முடிந்தது. மன்னர்கள் வேதியர்களுக்கு கோ தானம், பூதானம் செய்வதுண்டு. (அந்தணர்களுக்கு அதிகமாக ஊர் தானம் செய்த சோழ மன்னர்கள் ஊரும், வீடுமின்றி வாடியது சோகக் கதை). மன்னர்கள் தானமாக வழங்கும் ஊர்களுக்கு ‘மங்கலம் ’என்று பெயர்.

சேந்தமங்கலம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம், மங்கலக்குறிச்சி என்று பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய ஊர்களில் அண்மைக் காலம் வரை அந்தணர்கள் அரசோச்சியதை அகஸ்டின் ஆசிரியர் நினைவு கூர்ந்தார். இதில் சேந்தன், மாறன் என்பதெல்லாம் பாண்டியனின் பட்டப்பெயர்கள்.
ஆறுமுகமங்கலம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால் (ஆறு&முக &மங்கலம்) என பெயர் பெற்றது.

திருவழுதிநாடார்விளை, கோவன்காடு என்றெல்லாம் பாண்டியன் பெயரைச் சொல்லும் ஊர்கள் கொற்கையை சுற்றி உண்டு.
ஜம்மு& காஷ்மீர் போல
அக்காலத்தில் அனைத்து ராஜ்யங்களுக்கும் இரு தலைநகரங்கள் இருந்தன. சேரருக்கு வஞ்சி, முசிறி, சோழருக்கு உறையூர், பூம்புகார், பாண்டியர்களுக்கு கொற்கை, மதுரை. பெரும்பாலும் ஒரு நகரம் நிதி ஆதாரத்துக்கும், மற்றொரு நகரம் நிர்வாகத்துக்கும் வசதியாக இருந்தது.

கணிசமான கடல் வருமானம் இருந்ததால் பாண்டிய இளவரசர்கள் கொற்கையில் தங்கியிருந்து நிதி நிர்வாகம் செய்திருக்கின்றனர்.
மற்ற மன்னர்களைப் போலன்றி பாண்டியர்களுக்கென்று ஒரு மாறுபட்ட குணம் உண்டு. இவர்கள் முன்னோர்கள் குன்றுபோல் சேர்த்த சொத்தை குந்தியிருந்து சாப்பிட்டு அழிக்கமாட்டார்கள். புதிது ,புதிதாக வருவாயை பெருக்குவார்கள் என அரபி பயணி இதான் பதூதா தன் பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். கொற்கைக்குமிக அண்மையில் அக்காசாலை என்று அழைக்கப்படுகிற அக்கசாலை இருக்கிறது. இது பாண்டியர்களின் ரிசர்வ் வங்கி. (அக்கம்= பாண்டவர்கள் வெளியிட்ட நாணயம். அதை அச்சடிக்கும் (தொழிற்)சாலை அக்கசாலை).இந்தப்பகுதியில் ‘ ஏர வெற்றிவேல்செழியன் ’என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் கிடைத்துள்ளன.
இந்த அக்கசாலை கொல்லர்களின் வம்சாவளியினர் இன்றளவும் ஏரலில் வசிக்கின்றனர். கண்ணகியின் காற்சிலம்பை திருடி மன்னனின் கோபத்துக்கு முன்னோர்கள் ஆளாகிவிட்டதால் அஞ்சி இடம்பெயர்ந்துவிட்டதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது.
காலங்காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்க முடியாத சான்றுகள்.
அந்த வகையில் கொற்கையில் சின்னஞ்சிறுவர்களும் ஒரு கர்ணபரம்பரை கதை சொல்கிறார்கள். அதை பரவைக்கரசு (இது ‘கடலரசன்‘ எனும் பொருள் படும் பரம்பரை பெயர்),
மாரிமுத்து ஆகியோர் கூறக்கேட்டோம்.
கொற்கை குளம் நடுவே கோவிலொன்று உள்ளது. அதில் உறையும் தெய்வத்தை வெற்றிச் செல்வியம்மன் என்றும், வெற்றிச் செழியஅம்மன் என்றும் இருவிதமாக அழைக்கிறார்கள். கி.பி. 2&ம் நூற்றாண்டளவில் வடிவமைத்த சிலை இங்கு இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் தான் சிலப்பதிகாரம் அரங்கேறியிருந்தது. அதில் கூறப்படும் வெற்றிச்செழியன் எனும் பாண்டியனின் பெயரால் அக்கோயில் வழங்கியிருக்கலாம்.
ஆள்பவர்கள் பெயரில் ஆண்டவரை அழைப்பது அக்கால மரபு.

சுவாமிக்கு மன்னர் பெயர் வைப்பதோடு மன்னர் பெயராலேயே அர்ச்சனையும் செய்வர். இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் போசள மன்னர் மகளை முறப்பநாட்டில் திருமணம் செய்தார். முறப்பநாட்டில் எழுந்தருளியுள்ள சிவனை ‘திருக்கைலாய வீரநரசிம்ம போசளேஸ்வரா...’ என்று மாறவர்மசுந்தரபாண்டியனின் மாமனார் பெயரிலேயே இன்றளவும் வாழ்த்துவதாக பேராசிரியர் ராமசுப்பிரமணியன் கூறுகிறார்.

கொற்கை குளத்துக்கோவிலுக்குள் நுழைவோம். முற்காலத்தில் கண்ணகி சிலையே இக்கோவில் கருவறையில் இருந்ததாக கூறுகிறார்கள். கண்ணகி புகழ் பரவத்தொடங்கிய காலகட்டத்தில், தன் முன்னோர் இழைத்த அநீதிக்காக பொங்கிய கண்ணகியின் கோபத்தை தணிக்க பாண்டியன் இந்த ஆலயத்தை அமைத்துள்ளான்.

கி.பி. முதல் நூற்றாண்டின் முடிவுக் காலத்தில்தான் கண்ணகிக்கு நீதி பிழைத்த நெடுஞ்செழியன் வாழ்ந்தான். அவனது வழித்தோன்றலான வெற்றிச்செழியன், திருட்டுப்பழியை கண்ணகி மேல்சுமத்தி தன் குலக்கொம்பை தலை கவிழச்செய்த கொல்லர்களின் தலைவிழச்செய்ய வேண்டுமென்று வன்மம் கொண்டான்.

எனவே, கற்புத் தெய்வத்தின் ஆத்திரம் ஆற, அக்கசாலையில் வாழ்ந்த ஆயிரம் கொல்லர்களை அவள் கோவில் முன்பு கழுவேற்றினான். நரபலி கொடுத்த பின் வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதற்காக பின்னாட்களில் எருமைகள் ஆயிரம் பலியிட்டதாக கூறுகிறார்கள். இங்கு எழுந்தருளியுள்ள வெற்றிச்செழிய அம்மன் சிலையின் தலை சற்று சாய்ந்துள்ளது.
எருமைப்பலியை அம்மன் ஏற்காததால் அவள் தலை திரும்பி இருப்பதாகவும் ஐதீகம் நிலவுகிறது.

ஊர் மந்தையில் வன்னிமரம் ஒன்று வயோதிபத்தால் தரை சாய்ந்து கிடக்கிறது. அதன் வயதை 2000 ஆண்டுகள் என்று தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர். மரத்தின் அருகே வீரன் ஒருவனின் நடுகல்லும் சற்றுத்தள்ளி சமண முனிவர் சிலையும் கிடைத்திருக்கிறது. சுரங்கப்பாதை ஒன்றும் தூர்ந்து கிடக்கிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் சிற்றாறாக ஓடிய சிற்றோடையைப்பற்றி சொன்னோம் அல்லவா? ஊருக்கு வடமேற்கில் ஓடும் அந்த சிற்றோடையின் நடுவே ‘கன்னிமார் குட்டம்’ என்று அழைக்கப்படும் குறுநீர்த்தேக்கம் உள்ளது. பாண்டிய இளவரசிகள் இதில் குளித்ததாக பேசிக்கொள்கிறார்கள்.
ஊருக்குள் எங்கு தோண்டினாலும் சங்கும், சிப்பியும் கிடைக்கின்றன. பெரிய, பெரிய வெண்சங்குகளை வீடுகளிலும் தோட்டங்களிலும் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.

அறுக்கப்பட்ட சங்கும், சங்கு வளையல்களும் அகழ்வாராய்ச்சிக்குழுவினருக்கு மூட்டை மூட்டையாய் கிடைத்திருப்பதால் சங்கு ஆபரணம் தயாரிக்கும் தொழிற்சாலை அங்கு இருந்ததை அறிந்துள்ளனர்.

ஆற்றில் தோண்டத்தோண்ட மணல் வருவது போல அகரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் தோண்டத்தோண்ட சிப்பிகள் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு 50க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு 5ஆண்டு வரை வேலை கிடைத்தது என்கிறார்கள்.

சங்கு குளிப்போர் அமரும் இருக்கைகளையும், கள் அருந்துவோர் உறையும் சிறிய ஊர்களையும் உடையது கொற்கை என்ற சங்க பாடலுக்கு ஆதாரத்தை சங்கொலித்து கூறுகின்றன இந்த சான்றுகள். சங்கும் கள்ளும் கொற்கை கடற்கரையில் சங்கமித்திருக்கின்றன.

குடிக்கச் சிறந்த கள்ளைப் பற்றி குறிக்கத்தகுந்த சேதி ஒன்றுண்டு. முத்தைக் கொடுத்து பரதவர்கள் முங்க (நிரம்ப) குடித்துள்ளதாகவும் இலக்கியத்தில் இருக்கிறது.

பாண்டிய கடலில் பழயர் குல மகளிர்
அவிர்கதிர்முத்தமொடு வலம்புரி சொரிந்து (ஒளிசிந்தும் முத்துக்களோடு வலம்புரி சங்கை சிதற்றி)
கடல் தெய்வத்தை வணங்கியதை பழம்பாடல் படம் பிடித்துக்காட்டும்.
பழயர் வாழ்ந்த காயல் தான் பழைய காயலாக மருவியிருக்கிறது.
கொற்கை கடற்கரையில் குதிரையில் ஒருவன் சென்றபோது முத்துக்கள் குதிரைக்குழம்பில் குத்திக் காயம் ஏற்பட்டதாக சொல்வார்கள்.
எருது இழுத்த உப்பு வண்டியோடு உமணப்பெண் ஒருத்தி செல்கிறாள். அவள் வளர்த்த மந்தியன்று முத்துப்பரல்கள் போட்ட கிலுகிலுப்பையை ஆட்டி உமணத்தியின் புதல்வர்களை உற்சாகப்படுத்தியதாம்.

முத்து வணிகம் கி.பி.1&ம், 2&ம் நூற்றாண்டுகளில் மும்முரமாக இருந்துள்ளது. முத்தோடு குரங்கும், மயில் தோகையும், வாசனை திரவியங்களும் கிரேக்க, ரோம் தேசங்களுக்கு கொற்கை துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்,கொற்கை பொருட்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட மோகத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் எனப்பயந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளான்.
ஆதித்தமிழர்களின் கட்டடத்துக்கு ஆதாரக் கல்லாக விளங்கிய பெரிய சைஸ் செங்கல்கள், ஓடுகள் கொற்கை குளத்துக்குள் கிடைத்திருக்கின்றன. முதுமக்கள் தாழியும் நிறைய கிடைத்திருப்பதால் இப்போதைய குளம் அப்போதைய இடுகாடு என்போரும் இருக்கிறார்கள்.

மண்ணால் செய்த வலிமையான உறைகிணறுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக உறைக்கிணறுகள் எளிதில் மண் தூருகின்ற நெய்தல், பாலைப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் கொற்கை துறைமுகப்பகுதி என்பது உறுதியாகிறது.

அகரம் அருகே துறைமுக சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. அப்போதைய கொற்கை கோட்டத்துக்கு உட்பட்ட உமரிக்காட்டில் கோட்டை வாழ் ஐயன் கோவில் உள்ளது. ஆறுமுக மங்கலத்தில் பெரும்படை சாஸ்தா கோவில் உள்ளது.புன்னக்காயல் பக்கம் கோட்டைமூலக்காடு என்ற இடம் உள்ளது. இவை எல்லாமே பாண்டிய ராஜாங்க படை, பல பராக்கிரமங்களோடு தொடர்புடையது.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பாண்டியர்களை கொற்கையோடு தொடர்பு படுத்தி பேசுகின்றன.‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்பது அகநானூறு.‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’என்கிறாள் சிலப்பதிகார கண்ணகி.

நாயக்கர் காலத்தில் தென்காசியை ஆண்ட பராக்கிரமபாண்டியன் தான் கொற்கை வழித்தோன்றல் என்று கல்வெட்டில் பொறித்துள்ளான். பாண்டியருக்கான செங்கோல் பெருந்துறையில் உள்ளசெங்கோல் மடத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக மரபு வழி தகவல் வருகிறது.
மதுரையில் இருந்து ஆண்ட சங்க காலம் முதல் தென்காசியில் இருந்து ஆண்ட நாயக்கர் காலம் வரை பாண்டியர்கள் தங்களை கொற்கை பரம்பரையினராக காட்டிக்கொள்வதற்கு தகுந்த காரணம் இல்லாமலில்லை.
குமரித் தென் கடலில் கடல்கோளால் அழிந்த பண்டைய பாண்டிய நாட்டிலிருந்து மறுபிறவி எடுத்ததுபோல் மீண்ட பாண்டியர்கள் வடக்கு நோக்கி மறுவாழ்வு தேடி வந்தனர். கடலோடிகளான அவர்கள் கண்டறிந்து தங்கிய இடம் தான் கொற்கை. இனம் அழிந்த பெருந்துயரிலிருந்து நீங்கி வம்சவிருத்தி செய்து வருவாய் ஈட்டி அரசாட்சியை அடைந்த நிகழ்வுகள் கொற்கையில் இருந்தபோதே நடந்திருக்க வேண்டும். கடல் பின்வாங்கி கொற்கை தனது சிறப்பை இழந்தபின்பும் நன்றி மறவா நற்பண்பு காரணமாக எங்கு சென்றாலும் கொற்றம் அளித்த கொற்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.

செயற்கை கோள் எடுத்த தூத்துக்குடி படம் மூலம் ஒரு உண்மைதெரிந்துள்ளது. தற்போது ஏரலுக்கு தெற்கே ஓடும் தாமிரபரணி ஆறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஓடியுள்ளது. அதன் முகத்துவாரத்தில் இருந்ததால்தான் ஆறுமுகமங்கலத்துக்கு அப்பெயர் வந்தது. கொற்கைக்கு 1 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்த கனவி சமுத்திரத்தில் தாமிரபரணி கடலில் கலந்திருக்கவேண்டும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஏரலுக்கு வடக்கே நட்டாத்தியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நடு ஆற்றுக்குள் அமைந்த கோவிலே நட்டாத்தியம்மன் கோவில்.
‘ கொல் ’என்றால் முத்து. கொற்கை
முத்துக்குளித்துறைமுக நகரம்.‘ கபாடம் ’என்றாலும் முத்து என்று ஒரு பொருள் உண்டு. பாண்டியர்களின் பழமையான தலை நகரமான கபாடபுரம் பொருநை நதிக்கரையில் தான் அமைந்திருந்ததாக சொல்பவர்களும் உண்டு. ராமாயாணமும், மகாபாரதமும், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும் குறிப்பிடும் கபாட மாநகர் கொற்கை தானா? கடல்கொண்ட லெமூரியாவையும், பூம்புகாரையும் ஆராயத்தான் அரசு தயங்குகிறது என்றால் மண்கொண்ட கொற்கையை யாவது விரிவாக ஆய்வு செய்யவேண்டும்.

1 comment:

  1. கொற்கையில் முன்பிருந்த அருங்காட்சியம் தற்பொழுது அங்கில்லை, மீண்டும் அதை அங்கு எற்படுத்த வேண்டும்.

    ReplyDelete